தஞ்சை: பிரதமர் மோடி தேர்தல் முடியும் வரை தமிழகத்துக்கு அடிக்கடி வருவார். வடமாநிலங்களில் அவருக்கு செல்வாக்கு குறைந்து விட்டதால், தென்மாநில மக்களை ஏமாற்றுவதற்காக வந்து கொண்டிருக்கிறார் என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தஞ்சையில் அளித்த பேட்டி: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வு காலத்துக்குரிய, பணப்பலன்கள் கொடுக்காமல் 8 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள நிலையில், தற்போது அரசு ஊழியர்களின் நிலைமையும் அதேபோல ஆக்குவதற்காகத்தான் ஓய்வு பெறும் வயதை 60 என அறிவித்துள்ளது.
இதனால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும். இன்றைக்கு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழக அரசுதான் காரணம்.திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசுகிறது. அடுத்த கட்டமாக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே இரட்டை இலக்கத்தில் போட்டி போட்டு உள்ளது. வரும் தேர்தலிலும் இரட்டை இலக்கத்தில் போட்டியிட வலியுறுத்துவோம். சசிகலாவின் வருகை தமிழ்நாட்டு அரசியலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிமுகவில் வேண்டுமானால் கூடுதலாக குழப்பத்தை உண்டு பண்ணலாம். அதிமுக சசிகலா இடையே ஏகப்பட்ட பிரச்னை உள்ளது. அவர்கள் எளிதில் இணைவார்கள் என்பது சாத்தியமல்ல.
பிரதமர் மோடி தேர்தல் முடியும் வரை தமிழகத்துக்கு அடிக்கடி வருவார். வடமாநிலங்களில் அவருக்கு செல்வாக்கு குறைந்து விட்டதால், தென்மாநில மக்களை ஏமாற்றுவதற்காக வந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முதலில் கூறியது, தற்போது துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தான். அதுகுறித்து விசாரிக்கும் ஆணையத்தின் முன் இதுவரை ஓ.பன்னீ–்ர்செல்வம் ஆஜராகவில்லை. இது தொடர்பாக தான் ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.