ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது... தடுக்க தவறிய அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

சென்னை:  ரியல் எஸ்டேட் துறையில் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலை விரித்தாடுவதாகவும், இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், பழைய மாமல்லபுரம் சாலையில் 100 ஏக்கர் நிலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், வீடுகளைக் கட்டி விற்பனை செய்தது. இந்த வீடுகளுக்கு செல்ல சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், திருப்போரூர் பஞ்சாயத்து செயல் அதிகாரி, 2014ம் ஆண்டே பணி முடிப்பு சான்று வழங்கி விட்டதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று, குடியிருப்பு உரிமையாளர்கள்  சங்கத்தின் புகார் மனுவை விசாரிக்க மறுத்து விட்டது.இதை எதிர்த்து குடியிருப்பு உரிமையாளர்கள்  சங்கம் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம், புகாரை  மூன்று மாதங்களில் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ரியல் எஸ்டேட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ரியல் எஸ்டேட் துறையில் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று  கண்டனம் தெரிவித்தார்.மேலும், பணி முடிப்பு சான்றிதழ் என்பது வெறும் கட்டுமான பணிகள் முடித்தது மட்டுமல்ல. பணி முடிப்பு சான்றிதழ்கள் முறையான ஆய்வுக்கு பின் வழங்கப்படுவதில்லை. அவை வாங்கப்படுகிறது.

முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பணி முடிப்பு சான்றுகளை வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர் அளித்த புகாரை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் விசாரித்து மூன்று மாதங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: