பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு: ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங். எம்.பி. சஷி தரூர் நூதன போராட்டம்.!!!

திருவனந்தபுரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.90 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 86.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-க்கும் மேல் உள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் எரிவாயு விலை உயர்வு காரணமாக அடிப்படை அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வரும், திரினாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான

சஷி தரூர், பிற கட்சித் தொழிலாளர்கள் உடன் இணைந்து கேரள செயலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆட்டோவை கயிறு கட்டி சாலையில் இழுத்துச் சென்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனைபோன்று, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், பாட்னா செயலகத்திற்கு வெளியே சைக்கிளில் சென்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார். 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் மத்திய அரசுக்கும் மேலும் ஒரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: