ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் இடிக்கப்பட்டு 2 ஆண்டாகியும் கட்டப்படாத நகராட்சி கடைகள்-வியாபாரிகள் அவதி

ராசிபுரம் : ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில், இடிக்கப்பட்ட நகராட்சி கடைகள் 2 ஆண்டுகளாகியும் கட்டப்படாததால், வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில், டவுன் பஸ்கள் நிற்கும் இடத்தில் இருந்த 41 கடைகளின் உறுதி தன்மையை, நகராட்சி மண்டல அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த கடைகள் பயன்படுத்த தகுதியற்றவை என அறிவித்தனர். இதையடுத்து அந்த கடைகளை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்து சென்றனர். ஆனால், பழைய கடைகளை இடிக்கவோ, புதிதாக கட்டவோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வியாபாரிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, கடைகளின் மேற்கூரை மற்றும் முன்பக்க சுவர்களை இடித்து அகற்றினர். பின்னர், ஆமை வேகத்தில் பூச்சுவேலை நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் பேருந்து நிலையம் மூடப்பட்டதால், வியாபாரிகள் கடைகளை பற்றி யோசிக்கவில்லை. தற்போது தளர்வுகள்  அறிவித்த நிலையில், அனைத்து பஸ்களும் இயக்கப்படுகிறது.

ஆனால், இடிக்கப்பட்ட கடைகளை கட்டுவதற்கு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்திய வியாபாரிகள், வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, கடைகளுக்கு மேற்கூரை அமைத்து வியாபாரிகளிடம் ஒப்படைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: