பெட்ரோல், டீசல் வாங்க தனிநபர் கடன் வேண்டும்-வங்கியை அதிர வைத்த மாணவர்கள்

தேனி : அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாணவர் அணி தேசியக் குழு உறுப்பினர் திவாகரன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் சிவா, ரெமின்முத்துராஜ், கேசவன் உள்ளிட்டோர் நேற்று தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள கனரா வங்கிக்கு சென்று கோரிக்கை மனுவை வங்கியின் மேலாளரிடம் அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்று பேரரிடரால் ஏழை, எளிய மக்கள் வறுமையின் விளிம்பில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் எரிவாயு மீதான மத்திய, மாநில அரசுகளின் வரி உயர்வால் அடிப்படை அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

வங்கிகள் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த கல்வி மற்றும் வாகனக்கடன் வழங்குவது போல வாகனங்களை வைத்திருப்பவர்கள் பெட்ரோல், டீசல் வாங்க தனி நபர் கடனை வங்கி மூலம் வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி இருந்தனர். மத்திய அரசு அன்றாடம் பெட்ரோலிய பொருட்கள் விலையை உயர்த்தி வரும் நிலையில் பெட்ரோல், டீசல்  வாங்க கடன் வேண்டும் என்று மாணவர்கள் வங்கியில் மனு அளித்த சம்பவம் ேதனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: