கடந்த 2019 பிப்ரவரி முதல் கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டது. தமிழ்நாடும் இதன் பாதிப்புக்கு உள்ளாகி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, தேவைப்படும் தளர்வுகளுடன் அது தொடர்ந்து அமலில் உள்ளது. நோய்த் தொற்றாலும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களை குறைக்க, நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, பருப்பு போன்றவை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் வழங்கியதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரொக்க உதவியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ உதவிகளையும் மாண்புமிகு அம்மாவின் அரசு வழங்கியது. இந்நிலையில், கொரோனா தொற்று காலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், சுய உதவி குழுக்கள் தாங்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலாத நிலை உள்ளதாகவும், அவர்களின் துயரை துடைக்க தமிழ்நாடு அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் துயர் துடைக்க, அவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.