கட்டிய ஒரு வருடத்திலேயே சேதமடையும் தாலுகா அலுவலக கட்டிடம்

காளையார்கோவில் : காளையார்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் பூச்சுக்கள் உடைந்து விழுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.காளையார்கோவில் ஒன்றியம் 43 பஞ்சாயத்து 360க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்ட பெரிய ஒன்றியமாக உள்ளது. இப்பகுதி கடந்த 2015ம் ஆண்டு தாலுகாவாக அறிவிக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில், காளையார்கோவில் கால்நடை மருத்துவமனை பின்புறம் கடந்த 2017ம் ஆண்டில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக 2 கோடியே 69 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு 13.6.2019ல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தைத் தமிழக முதல்வர் நேற்று காணொளி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். புதிய கட்டிடம் கட்டி ஒரு வருடம் மூன்று மாதங்களே ஆன நிலையில் கட்டிடத்தில் மழை காலங்களில் சுவர் முழுவதும் ஈரம் கசிந்து ஒழுகுகின்றது.

கட்டிடம் தரமற்ற முறையில் பூசப்பட்டுள்ளதால் அங்காங்கே உடைந்து விழுகின்றது. தாலுகா அலுவலக வளாகத்தில் போடப்பட்டுள்ள டைல்ஸ் உடைந்து பொது மக்களின் பாதங்களை பதம் பார்க்கின்றது. எனவே தரமான முறையில் பேன்டேஜ் ஒர்க் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: