×

சிவகாசி அருகே மீண்டும் பயங்கரம் பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் கருகி பலி: 19 பேர் படுகாயம்

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உடல் கருகி பலியாகினர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல், ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் பாண்டியன் (55). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ளது. இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த ஆலையில் நேற்று மாலை 4.30 மணியளவில், தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

தொழிலாளர்கள் பதறியடித்து தப்பி ஓடினர். அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு தீ பரவத்தொடங்கியது. இதனால் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வெடி விபத்தில் 15 கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதில், படுகாயமடைந்த 19 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகாசி அருகே எலியார்பட்டியை சேர்ந்த வீரராஜ் மனைவி செல்வி (37) என்பவர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மற்றவர்கள் உடல் அடையாளம் காணப்படவில்லை.சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு  தொழிற்சாலை உரிமையாளர் தங்கராஜ்பாண்டியன் மற்றும் போர்மேன் ஜெயபால் ஆகிய 2  பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை விருதுநகர்  எஸ்பி பெருமாள், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி கணேசன்  மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை  நடத்தினர். சிவகாசி பகுதியில் அடுத்தடுத்து நடக்கும் பட்டாசு ஆலை விபத்துகள் இப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

பட்டாசு தொழிலை முறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் கடந்த பிப். 12ல் ஏற்பட்ட விபத்தில் 23க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது பற்றி தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் நேற்று விசாரித்தனர். வக்கீல் விநாயகன், நீலமேகம் ஆஜராகி, ‘‘‘‘பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் பெறுவது, செயல்படுவது ஆகியவை தொடர்பான விதிகளை கடுமையாக பின்பற்றவேண்டும்’’’’ என வாதிட்டனர்.

அரசு வக்கீல் கிருஷ்ணதாஸ் ஆஜராகி, ‘‘‘‘பலியானோரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர்’’’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘பட்டாசு ஆலை தொழிலை முறைப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோருக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படுகிறது? விபத்தை தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.


Tags : Otikhazi , சிவகாசி, பட்டாசு ஆலை, பலி
× RELATED சிவகாசி நகராட்சி பகுதியில் வாறுகால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்