கலைஞர் வழியில் திமுக அரசை அமைக்க உறுதியேற்று மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம்: ‘செயல் வீரர்’ செயலி அறிமுக விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘‘கலைஞர் வழியில் திமுக அரசை அமைக்க உறுதியேற்று, மக்களின்  பேராதரவுடன் வெற்றி பெறுவோம். மக்களின் கோரிக்கைகளை 100 நாளில்  நிறைவேற்றுவோம்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை-திமுக அலுவலகம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற ‘செயல் வீரர்’ செயலி அறிமுக விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று, அச்செயலியைத் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு பெற்று வரும் திமுகவிடம் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதி வெற்றி பெற முடியாது என்பதால் ஆட்சியாளர்களும் அவர்களின் கைக்கூலிகளும் நிழல் யுத்தத்தை நடத்துகிறார்கள். போர்க்களம் எதுவாக இருந்தாலும் வெற்றி திமுகவுக்கு தான் என்பதை மரணத்திலும் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்ட தலைவர் கலைஞரின் தொண்டர்களான நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நிரூபித்திட வேண்டும்.

அதற்குத்தான் இந்த செயல்வீரர் செயலி அறிமுக விழா. செயல்வீரர் என்றால் யார்? திமுகவின் ஒவ்வொரு ெதாண்டனும் செயல்வீரர்தான். ஊழியர்கள்-உறுப்பினர்கள் என்று சொல்லி வந்ததை மாற்றி, செயல்வீரர்கள் என மதிப்புடன் அழைத்த இயக்கம் இது. அதனால் கழகத்தின் ஒவ்வொரு தொண்டர்களுக்குமான இந்த செயலியை எல்லாரும் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இன்றைக்கு வாழ்க்கை முறை மாறிவிட்டது. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக செல்போனை எடுத்துப் பார்க்கிறோம். அதில் வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் என எல்லாவற்றிலும் ஏதாவது செய்திகள் வருகின்றன.

நல்ல செய்திகளைவிட, உண்மைகளை விட,  பொய்கள் வரிந்து கட்டி நிற்கின்றன.  அதைத்தான் மக்கள் நம்ப வேண்டியிருக்கிறது. அதைப் பற்றி பேசுகிறார்கள். அதை உண்மை என நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அதனால் நம்முடைய இன்றைய முதன்மையானப் பணி என்பது பொய்ப் பிரசாரத்தை முறியடிப்பது. அவதூறுகளை விரட்டி அடிப்பது. அதற்குத்தான் இந்த செயலி. இதில் உங்களுக்கு  உண்மைச் செய்திகள் வந்து கொண்டே இருக்கும். எதிரிகளுக்கான பதிலடிகள் வந்து கொண்டே இருக்கும். ஆதாரமான போட்டோக்கள் வரும். வீடியோக்கள் வரும்.

அதனை நீங்கள் மூன்று முறை க்ளிக் செய்தால் பேஸ்புக், டிவிட்டர் என எல்லாவற்றிலும் பதிவாகிவிடும். அதுபோல வாட்ஸ்அப் குரூப்களிலும் இதனைப் பகிரலாம். குறிப்பாக, பெண்களிடம் இந்த பரப்புரை நடைபெற வேண்டும். வாக்காளர்களில் பாதிக்கும் அதிகமாக பெண்கள் இருக்கிறார்கள். அவர்களால் நம்மைப் போல பொதுக்கூட்டம், மாநாடுகளுக்கு வர முடியாது. செய்தி சேனல்களைப் பார்ப்பதற்கும் அந்தளவு நேரம் இருக்காது. ஆனால், அவர்கள் கையில் உள்ள செல்போனில் நமக்கு எதிரான செய்திகள் எளிதாக பரப்பப்படும். அதனை முறியடிப்பதற்கு, இந்த செயலி பயன்படும்.

உங்கள் வீட்டில் உள்ள பெண்கள், உறவுக்காரர்கள் ஆகியோருக்கு இதில் வரும் செய்திகளைப் பகிர்ந்தால், உங்கள் செல்போன் நம்பரிலிருந்து என்ன வந்திருக்கிறது என்று அவர்கள் நிச்சயமாகப் பார்த்துவிடுவார்கள். அவர்களை சுற்றியுள்ள பொய்த்திரை விலகும். உண்மைகள் தெளிவாகும். கோடிக்கணக்கான மக்களிடம் உண்மைகளைக்கொண்டு போய் சேர்த்துவிட முடியும். இதற்காக நீங்கள் செலவிட வேண்டியது, ஒரு  நாளைக்கு 10 அல்லது 15 நிமிடம்தான். ஒவ்வொரு வாக்கும் தேர்தல் களத்தில் நமக்கு முக்கியமானது. அது பொய்ப் பிரசாரத்தால் தகர்ந்துவிடக்கூடாது. உண்மைகளை-சாதனைகளை முன்வைத்து, பொய்யர்களை-பித்தலாட்ட ஆட்சி நடத்துபவர்களை விரட்டி அடிக்க வேண்டியது நமக்கான கடமையாகும்.

இந்தக் கடமையை நாம் சரியாக செய்யாமல் சற்று அலட்சியமாக இருந்ததால்தான், இன்று தமிழ்நாடு திவாலாகும் நிலையில் உள்ளது. உரிமைகள் பறிபோய், அடிமைகளால் ஆளப்படுகிறோம். இந்த இழிநிலையை மாற்றிட தொண்டர்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். திமுக சட்டத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த 5  லட்சத்துக்கும் அதிகமான ெதாண்டர்கள் நினைத்தால் ஒரு மணிநேரத்தில் கோடிக்கணக்கான பேருக்கு நமது செய்திகளை கொண்டு சேர்த்து விட முடியும்.

ஒரு பொதுக்குழுவையே காணொலி மூலம் நடத்தி, இந்திய அரசியல்களத்தை திரும்பிப் பார்க்க வைத்த பெருமைக்குரியது திமுக. அதனால், தகவல் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தி எதிரிகளின் பொய்களை தவிடுபொடியாக்குவோம். தலைவர் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை ஒவ்வொருவர் உள்ளத்திலும் பதிய வைப்போம். தலைவர் கலைஞர் வழியில் திமுக அரசை அமைக்க உறுதியேற்று, மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம். மக்களின் கோரிக்கைகளை 100 நாளில் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: