பெங்களூரு: தமிழக மாநிலத்தில் அரசு போக்குவரத்து பணியாளர்கள் தங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தியுள்ளனர். அண்ணா தொழிற் சங்கத்தை தவிர, பிற தொழில் சங்கங்கள் முழுவதும் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்த நிலையில், கர்நாடகத்திற்கு செல்லும் பயணிகளும் பஸ் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூரு, கொள்ளேகால் ஆகிய பகுதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் செல்லவில்லை. சொற்ப அளவே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மாநிலம் சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்பட பிற மாவட்டங்களில் இருந்து பெங்களூருவிற்கு வேலை மற்றும் பல்வேறு தொழில் நிமித்தமாக வரும் பயணிகள் பேருந்துகள் இல்லாமல் தவித்தனர்.