×

நகைகளை திருடி விற்பனை செய்த 3 பேர் கைது

பெங்களூரு: மைசூரு ரிங்சாலை வழியாக ஒரே காரில் செல்லும் மூன்று பேர் தங்களிடம் வைத்துள்ள துப்பாக்கியை விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக குவெம்புநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார் இன்ஸ்பெக்டர் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்து காரை தடுத்து நிறுத்தி மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் ஹாசன் மாவட்டம் புவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த திலீப்குமார் (38), மைசூரு கடகொல கிராமத்தை சேர்ந்த மஞ்சு (35), சாம்ராஜ்நகர் மாவட்டம் உல்லேபுரா கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரா (29) என்று தெரிய வந்தது. அதே போல் திலீப்குமார் குவெம்புநகர், விஜயநகர், அசோக்புரம் போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பூட்டிய வீடுகளில் தங்க நகைகள் திருடி அதை நண்பர்கள் இருவர் உதவியுடன் விற்பனை செய்து வருவதும், ஒரு வீட்டில் திருடும் போது துப்பாக்கி, குண்டுகள் இருந்ததால் அதையும் திருடி வந்து விற்பனை செய்ய முயற்சித்து வந்ததும் தெரிய வந்தது.
 
இவர்களை கைது செய்த போலீசார் இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 21.50 லட்சம் மதிப்பிலான 391 கிராம் தங்க நகைகள், துப்பாக்கி, ஒரு கார், 6 குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : 3 arrested for stealing and selling jewelery
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...