அண்ணாநகர்: ஐசிஎப் பகுதி கடைகளில் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலித்த உதவி ஆய்வாளர் மகனை போலீசார் கைது செய்தனர்.
ஐசிஎப் பகுதியில் உள்ள கடைகளில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலிப்பதாகவும், மாமூல் தர மறுக்கும் கடைக்காரர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஐசிஎப் போலீசாருக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது. ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் போலீஸ் உயரதிகாரிகளிடம் இதுபற்றி புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஐசிஎப் நியூ ஆவடி பகுதியில் கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.