பெருமாள் கோயில் குளத்தில் தாமரை இலைகள் அகற்றம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம்  ஸ்ரீ தலசயன பொருள் கோயில் குளத்தில் இருந்த தாமரை இலைகள், தினகரன் நாளிதழ் செய்தி எதிரோலியால் அதிரடியாக அகற்றப்பட்டது. மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே  ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இக்கோயில், 108 திவ்ய தேசங்களில் 63வது இடத்தில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று இரவு மாசி மக தெப்ப திருவிழா, நாளை காலை 7 மணிக்கு தீர்த்தவாரி விழா நடைபெற உள்ளது.

இந்த கோயிலுக்கு சொந்தமான புஷ்கரணி தெப்பக்குளம் பஸ் நிலையத்தில் இருந்து கடற்கரை கோயில் செல்லும் வழியில் உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், குளத்தில் அதிகமான தண்ணீர் தேங்கி தாமரை இலைகள் வளர்ந்து, குளம் முழுவதும் நிறைந்து காணப்பட்டது. தெப்ப உற்சவத்துக்கு குறைந்த நாட்கள் உள்ளதால், தெப்ப திருவிழா நடத்தப்படுமா என பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக, கடந்த 13ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதைதொடாந்து, கோயில் நிர்வாகத்தினர் குளத்தை நேரில் சென்று ஆய்வு செய்து, தனியார் நிறுவனத்துடன் இணைந்து 2 படகுகள் மூலம் குளத்தில் படர்ந்து இருந்த தாமரை இலைகளை உடனடியாக அகற்றினர். பக்தர்களின் பல மாத கோரிக்கை, தினகரன் நாளிதழால் நிறைவேறியதற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: