திருவள்ளூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்

திருவள்ளூர்: தமிழகம் முழுவதும் அரசு பஸ் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மக்கள்  கூட்டம் நிரம்பி வழிந்தது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகினர். பஸ்கள் வராததால் ரயில் நிலையங்களுக்கு படையெடுக்க தொடங்கினர்.

கடம்பத்தூர், திருவள்ளூர், புட்லூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நேற்று காலை பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. இதனால், அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல், கடற்கரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களிலும் இன்று வழக்கத்துக்கு  மாறாக அதிக கூட்டம் காணப்பட்டது.

ஒரே நேரத்தில் மக்கள் கூடியதால், டிக்கெட் எடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ரயில் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்தனர். இதனால் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு குறித்த  நேரத்தில் செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர்.

Related Stories: