திமுக எம்பி கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் பா.ஜ. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன், அத்தொகுதி வாக்காளர் சந்தானகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தனர். தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பாஜ நிர்வாகி முத்துராமலிங்கம் என்பவருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. வழக்குகளை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைச் சுட்டிக்காட்டி, கனிமொழிக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளின் விசாரணையையும் 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: