அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லையில் சீனா ஊடுருவ முயற்சி?.. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்

சிக்கிம்: கிழக்கு லடாக் எல்லையில் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டாலும், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லைகளில் சீன ராணுவம் மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மே மாதம் சீன ராணுவம் ஊருடுவ முயற்சி செய்தது. இதை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் இரு ராணுவ வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆபத்தான ஆயுதங்களை கொண்ட சீன வீரர்கள் தாக்கியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர்.

சீன தரப்பில் 35க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்பட்டாலும் சீன ராணுவம் ஆதாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. அப்போதிலிருந்தே லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு இரு நாட்டு ராணுவமும் தலா 50 ஆயிரம்  வீரர்களை எல்லையில் குவித்து வைத்துள்ளது. பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கிழக்கு லடாக்கில் படைகளை வாபஸ் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தும் அதே நேரத்தில், மேற்கில் உள்ள அசல் கட்டுப்பாட்டு எல்லையின் குறுக்கே, மாப்டோ லா-வில் சீன ராணுவம் படைகளையும், ஆயுதங்களையும் குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிக்கிமின் வட எல்லையில் உள்ள நாகு லாவில் படைக்கலன் கிடங்கு மற்றும் சாலை வசதிகளை சீனா அதிகப்படுத்தி வருகிறது. அங்கு சீன துருப்புக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. சிக்கிமை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக சீனா அங்கீகரித்தாலும், எல்லைப்பகுதி தொடர்பாக தகராறு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் நாகு லாவை பதற்றம் நிறைந்த இடமாக வைக்க சீன ராணுவம் முயற்சித்து வருகிறது.

Related Stories: