புதுடெல்லி: ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக குறுகிய தூர ரயில்களின் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, இந்திய ரயில்வே கடந்தாண்டு மார்ச் 22ம் தேதி முதல் ரயில்களின் இயக்கத்தை நிறுத்தியது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் படிப்படியாக நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மொத்தம் 1,250 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ், 5,350 புறநகர் ரயில் சேவைகள், 326க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய ரயில்வே பயணிகளின் ரயில் கட்டணத்தை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.