தங்கம் போல் உயரும் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசை கண்டித்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மே.வங்க முதல்வர் மம்தா.!!!!

கொல்கத்தா: தமிழகம், அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், மாநில மற்றும் தேசிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேற்கு  வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை தினமும் தங்கத்தை போன்று ஏற்றம் அடைந்து வருகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-க்கும் மேல் உள்ளது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.91.12 காசு ஆகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.84.23 காசுகளாகவும் உள்ளது.  

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வரும், திரினாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சாலையில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தப்படி மம்தா பானர்ஜி பயணம் செய்தார்.

ஏற்கனவே, பெட்ரோல் மீதான சேவை வரியை 1 ரூபாய் குறைத்துள்ளதாக தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மம்தா பானர்ஜியின் இந்த வாகன பயணம் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வினால், மாற்ற வசதிகளை அணுக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: