நாய்பிடாவ்: ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது அந்த போராட்டத்தில் டிரக் ஓட்டுநர்கள் பங்கேற்று உள்ளதால் இறக்குமதியாகும் சரக்குகளை கொண்டு செல்வது தடைபட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கண்டெய்னர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி கடந்த 1-ந்தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.
இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது. நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தப் போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ஆனாலும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது டிரக் ஓட்டுநர்கள் போராட்ட காலத்தில் இறங்கியுள்ளனர். மியான்மர் கன்டெய்னர் டிரக் சங்கத்தில் 4000 ஓட்டுநர்கள் உள்ளனர். இவர்களில் 90 பேர் வேலைநிறுத்தம் செய்து ராணுவ அரசுக்கு தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இதனால் முக்கிய நான்கு துறைமுகங்களில் தினமும் 800 கன்டெய்னர்கள் கையாளப்படும். இந்த எண்ணிக்கை தற்போது 100-க குறைந்துள்ளது.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச அளவில் கண்டெய்னர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மியான்மர் டிரக் டிரைவர்களின் போராட்டத்தால் கன்டெய்னர்களின் வாடகை 50 % அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.