கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்!: சிறு பாசிமணிகள், மண் தட்டுகள் கண்டெடுப்பு.. அருங்காட்சியகம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 7ம் கட்ட அகழாய்வில் சிறு பாசிமணிகள் மற்றும் மண் தட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த வாரம் தொடங்கின. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக கீழடியில் 9 குழிகள் தோண்ட நூல் கட்டி அளவீடு செய்து ஒரு அகழாய்வு குழி மட்டும் 3 அடி ஆழம் தோண்டப்பட்டது.

தொடர்ந்து, நேற்று நடைபெற்ற அகழாய்வின் போது பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய சிறு பாசிமணிகள், சிறு மண் தட்டுகள், சில்லு வட்டுகள் மற்றும் பானை ஓடுகள்  கிடைத்ததாக கூறப்படுகிறது. அகழாய்வு பணியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சஞ்சீவ் பானர்ஜி மற்றும் திருபுவனம் நீதிமன்ற நீதிபதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் பற்றிய விவரம் குறித்தும் நீதிபதி கேட்டறிந்தார். பின்பு 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்தையும் தலைமை நீதிபதி பார்வையிட்டார்.

அகழாய்வு பணிகள் நடைபெறும் கீழடிக்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். எனவே இப்பகுதியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். முன்னதாக நடைபெற்ற 6ம் கட்ட அகழாய்வில் தங்க காதணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. தற்போது நடைபெற்று வரும் 7ம் கட்ட அகழாய்வு பணி தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் பல பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Related Stories: