டெல்லி : #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்துக்கு பிரதமரை வரவேற்று பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர். தமிழகத்தில் புதிய திட்டங்களை இன்று தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று 12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார் மோடி.நெய்வேலியில் புதிய அனல் மின் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.மேலும், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் திருப்பூர் வீரபாண்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய 1280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1248 குடியிருப்புகள், மதுரை ராஜாக்கூரில் கட்டப்பட்ட ஆயிரத்து 88 குடியிருப்புகள், திருச்சி இருங்கலூரில் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகளை தொடங்கி வைக்கிறார்.மேலும், மதுரை, கோவை, தஞ்சை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட இருக்கிறார்.