தலைமையின் மனதை கவர ‘தண்ணி’யில் மிதக்கும் மாஜி...!

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில் 2011 முதல் 2016 வரை எம்எல்ஏவாக இருந்தவர் கருப்பையா. 1997 முதல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் தண்ணீரில் மிதக்கும் ‘ஜல பிரதட்சணம்’ என்ற யோகா நிகழ்ச்சியை செய்து வருகிறார். 24வது ஆண்டாக அலங்காநல்லூர் அருகே குமாரத்தில் ஒரு கிணற்றில் 36 நிமிடங்கள் ‘ஜலப்பிரதட்சணம்’ செய்தார். ‘சட்டமன்றத்தில் பார்வையாளராக செல்லக் கூட தகுதியற்ற எனக்கு, எனது யோகாவை பார்த்து, 2011ல் சோழவந்தான் தொகுதிக்கு சீட் தந்து ஜெயலலிதா வெற்றி பெறச் செய்தார். அவரது நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சியை தொடர்கிறேன். வரும் சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். அதிமுக தலைமையான ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பார்வையில் படும் வகையில் இந்த நிகழ்வை நடத்தியுள்ளேன்’ என்கிறார்.

தொகுதிக்குள் ஜல பிரதட்சணம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்ட முன்னாள் எம்எல்ஏ கருப்பையா, அவர் தேர்வு செய்த கிணற்றில் ஜலபிரதட்சணத்திற்கு கிணற்றின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனராம். இதனால் வேறு பல கிணறுகளை தேடி அலைந்து காலையில் துவக்க வேண்டிய ஜலபிரதட்சண சாகசத்தை, பகல் ஒரு மணி அளவில் குமாரம் கிராமம் அருகே ஒரு கிணற்றில் செய்து முடித்தார். சோழவந்தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுகவில் கடும் போட்டி நிலவும் நிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் நன்மதிப்பை பெற்று, சீட்டு வாங்கும் விருப்பத்தில் முன்னாள் எம்எல்ஏ கருப்பையா இந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளார்.

Related Stories: