சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை போன்று தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.3,000, கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5,000 மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்கிய நேற்று முதல் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தலைமையில் 100 அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதனாலேயே மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை தொடர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, உடனடியாக மாற்றுதிறனாளிகள் சங்கத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்.