அமெரிக்க பட்ஜெட் துறைக்கு நீராவை விட்டால் வேறு ஆளில்லை: வெள்ளை மாளிகை பிடிவாதம்

வாஷிங்டன்: ‘பைடன் நிர்வாகத்தின் பட்ஜெட் துறைக்கு சரியான, பொருத்தமான ஒரே நபர் நீரா டாண்டன்தான்’ என வெள்ளை மாளிகை அமோக ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்கும் முன்பே, அமைச்சர்கள், அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைத்தார். இதில், இந்திய வம்சாவளியினருக்கு அதிகளவில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  அதில் வெள்ளை மாளிகையின் மேலாண் மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குனர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்்த நீரா டாண்டன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆனால், ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ மான்சின் என்ற செனட் எம்பி.யே டாண்டன் நியமனத்தை எதிர்த்து  வாக்களிக்க போவதாக தெரிவித்தார்.  இதே போல், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சூசன் கொலின்ஸ், மிட் ரூம்னி, ராப் போர்ட்மேனும் அவருக்கு எதிர்த்து வாக்களிப்பதாக கூறியுள்ளனர்.

செனட் எம்பி.க்களை கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் டாண்டன் விமர்சித்து இருந்ததே இதற்கு காரணம். இதனால், அவரது நியமனத்துக்கு ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிபரால் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ள அதிகாரிகள் நியமனத்துக்கு, செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். தனது தவறுக்காக டாண்டன் மன்னிப்பு கேட்டுள்ள போதிலும், அதை ஏற்க இந்த எம்பி.க்கள் தயாராக இல்லை. ஆனால், டாண்டனுக்கு வெள்ளை மாளிகை ஆதரவாக உள்ளது. ‘‘பட்ஜெட் துறையை வழிநடத்துவதற்கான சரியான, பொருத்தமான ஒரே நபர், நீரா டாண்டன். அவரை விட்டால் வேறு ஆளில்லை. அவர் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவார்’’ என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் பெசாகி கூறி உள்ளார்.

குடியுரிமை தேர்வில் தளர்வு

டிரம்ப் அதிபராக இருந்தபோது வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவதை குறைப்பதற்காக,  குடியுரிமை தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்பட்டதை 128 கேள்விகளாக உயர்த்தப்பட்டது. இவை பெரும்பாலும் அரசியல் ரீதியாகவும், கடுமையாகவும் இருந்தன. இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளார். இனி, 2008ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த தேர்வு முறையே மீண்டும் தொடர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: