கூட்டு பலாத்காரம் தோல்வி அடைந்ததால் மாணவியை தீ வைத்து எரித்தது மர்ம கும்பல்: ஆடையின்றி தீக்காயத்துடன் ரோட்டில் கிடந்த அவலம்

ஷஜஹான்பூர்:  உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சி தோல்வியடைந்ததால் மர்ம கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. சமீப நாட்களாக சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றது. இந்நிலையில், கல்லூரி மாணவி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷஜகான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவி ஒருவர்  நிர்வாண நிலையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடியபடி நேற்று முன்தினம் மாலை கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து  அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இது தொடர்பாக போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலத்தில், ராய்கேடா பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 3 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அது தோல்வி அடைந்ததால் அவர்கள் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் மாணவியின் கல்லூரியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் செல்போன் அழைப்புகளில் உள்ள எண்கள், கல்லூரி நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

சிறுமி பாலியல் பலாத்காரம்

உத்தரப்பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த ஞாயிறன்று தனியாக சென்ற சிறுமியை கல்லு ராஜ்புத் என்பவர் அடித்து இழுத்துசென்றுள்ளார். பின்னர் அவரது  வீட்டில் வைத்து சிறுமியை ரோஹித் யாதவ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: