நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் வருவாய்துறை ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க முடியாமல் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5ம் நாளாக வருவாய்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய ஆறு தாலுகா அலுவலகங்கள், வட்ட வழங்கல் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வருவாய் பிரிவு, ஆர்டிஒ அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஊழியர்கள் போராட்டம் காரணமாக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.