உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என பெருமை பெற்ற சர்தார் படேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம்!!

அகமதாபாத்: உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த நிலையில், அகமதாபாத் மோதிராவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானம் நரேந்திர மோடி மைதானம் என திடீரென பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*அகமதாபாத் சபர்மதி நதிக்கரை ஓரம் கடந்த 1982ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த சர்தார் வல்லபாய் படேல் மோதிரா மைதானம் கடந்த 2015ம் ஆண்டு இடிக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

*49 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருந்த இந்த மைதானம் தற்போது ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது.

*அதிகபட்சமாக மெல்போர்ன் 90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட மைதானமாக உள்ளது. இதனை முறியடித்து மிகப்பெரிய மைதானமாக அமைக்கப்பட்டுள்ளது.

*சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் அதிநவீன வசதிகள் உள்ளன. பயிற்சிக்கென தனித்தனியே 2 மைதானங்கள் பெவிலியனுடன் அமைக்கப்பட்டுள்ளது.

*8 செ.மீ. மழை பெய்தாலும் கூட அடுத்த சில மணி நேரத்தில் போட்டியை நடத்தும் வகையில் வடிகால் வசதி உள்ளது. மின்விளக்கு கோபுரங்களுக்கு பதிலாக மேற்கூரைகளின் விளிம்பில் எல்இடி விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன.

*இதனால் மைதானத்தில் நிழல் விழாது. 4 டிரஸ்சிங் ரூம், நீச்சல் குளம், பிரமாண்ட உணவகம் உள்ளிட்டவை உள்ளன.

*இந்த நிலையில்  உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு மற்றும் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

*தொடர்ந்து, அகமதாபாத்தின் மோட்டேராவில் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் ரூ.4,600 கோடியில் விளையாட்டு பெரு வளாகம்  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி பூமி பூஜை செய்தனர்.

*இதனிடைய இந்த மைதானத்தில் இன்று முதல் போட்டி  பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

Related Stories: