5 மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இறுதி செய்வது குறித்து இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இறுதி செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதி நிறைவடைகிறது. இதேபோல, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் விரைவில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கெனவே நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த நிலையில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்தயாரிப்புப் பணிகள், தேர்தல் தேதிகளை இறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் கொரோனா பரவல் விலகாத நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது, பதற்றமான வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மேலும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இறுதி செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

Related Stories: