சென்னை: சென்னை விரும்பாக்கம் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இளம் அழகிகள் மற்றும் மாடலிங் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தி.நகர் துணை கமிஷனர் அரிகரன் பிரசாத்திற்கு புகார் அளித்தனர். அதன்படி தனிப்படையினர் வாடிக்கையாளர்கள் போல் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் திரைப்பட இயக்குநர் ஒருவரின் மனைவி காந்திமதி (40), மாடலிங் அழகிகள் மற்றும் சினிமா பிரபலங்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் இயக்குநர் மனைவி காந்திமதியை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து மாடலிங் அழகி ஒருவரையும் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட காந்திமதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமாவில் பெரிய நடிகைகளாக வரவேண்டும் என்ற ஆசையில் இயக்குநராக உள்ள தனது கணவரை சந்திக்க வரும் இளம் அழகிகள் மற்றும் மாடலிங் அழகிகளிடம், உங்களுக்கு பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி தன் வசப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.