புதுடெல்லி; குஜராத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆம்ஆத்மி முதல்முறையாக வெற்றிக்கணக்கை தொடங்கியதால் அங்கு நாளை மறுநாள் கெஜ்ரிவால் ரோடு ஷோ நடத்துகிறார். குஜராத் மாநிலத்தில் 6 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பா.ஜ, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் ஆம்ஆத்மி முதல்முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளது. அதோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட முதல்முறையிலும் 27 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. 6 மாநகராட்சியிலும் ஆம்ஆத்மி சார்பில் 470 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். இதில் சூரத்தில் மட்டும் 27 இடங்களில் ஆம்ஆத்மி வேட்பாளர்கள் வெற்றி பெற்றது கெஜ்ரிவாலுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து டிவிட்டரில் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். அதில்,’ புதிய அரசில் தொடக்கத்தை மாநிலத்தில் வரவேற்ற குஜராத் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.