தங்கவயல்: ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் பெருமளவில் வசிக்கும் தங்கவயலில் அரசின் இந்திரா கேன்டீன் திறக்க வேண்டும்’ என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முந்தைய காங்கிரஸ் அரசு ஏழை மக்கள் பயன் பெரும் வகையில் மலிவு விலையில் உணவு பொருட்களை வழங்கும் இந்திரா கேன்டீன்களை மாநிலம் முழுவதும் திறந்து செயல்படுத்தி வருகிறது. தங்கவயலை அடுத்துள்ள பங்காரு பேட்டையிலும் இந்திரா கேன்டீன் செயல்பட்டு வருகிறது. ஆனால் தங்கவயலில் இது வரை திறக்கப்படவில்லை. கடந்த நகரசபை கவுன்சில் இருந்த போது நடந்த கூட்டத்தில் தங்கவயலில் மைய பகுதியாக விளங்கும் நகரமன்ற வளாகம், அரசு பொது மருத்துவமனை, அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகியவற்றின் ஏதாவது ஒரு இடத்தில் இந்திரா உணவகம் அமைப்பது தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை உறுப்பினர்கள் ஏக மனதாக வரவேற்று நிறைவேற்றினர். இந்த கவுன்சிலின் பதவி காலமும் முடிவடைந்து, புதிய கவுன்சிலும் பொறுப்பேற்று விட்டது.