பெங்களூரு: புதுச்சேரியில் பாஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறினார். கர்நாடக மாநில பாஜ துணை தலைவரும் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளருமான நிர்மல்குமார் சுரானா கூறியதாவது, ``புதுச்சேரியில் இருந்த நாராயணசாமி தலைமையிலான ஆட்சி மக்களுக்கு எதையும் செய்யவில்லை. ஐந்தாண்டில் புதிய திட்டங்கள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. குறிப்பாக சுற்றுலா துறை முற்றிலும் முடங்கியது. மில்கள் அதிக அளவில் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்க விடப்பட்டனர். ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்கப்படாத நிலையில் கடைகள் மூடப்பட்டு புதுச்சேரி மக்கள் மிகவும் துன்பத்தை அனுபவித்தனர்.