ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன?: விடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு வரும் 26-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை.!!!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில கவர்னருக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து முதலாவதாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கூட ஜனாதிபதி கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் நிராகரித்து விட்டார்.

இதற்கிடையே, பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 21ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிவாளன் உட்பட ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுத்து அதனை அறிவிப்பார். இதுகுறித்து மத்திய அரசிடமும் அவர் விளக்கியுள்ளார் என தெரிவித்தார். இதையடுத்து, அவரது விளக்கங்களை கேட்ட  உச்ச நீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, தமிழக ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா கடந்த 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்த முழு அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது. மாநில ஆளுநர் என்ற முறையில் நான் தலையிட  அதிகாரம் கிடையாது. இதில் ஒரு நாட்டின் பிரதமர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் எப்படி விடுதலை என்ற முடிவை நான் எடுக்க முடியும் என்பது புரியவில்லை. அதனால் ஏழு பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவை தீர்மானம் மற்றும் பேரறிவாளன் கருணை மனு ஆகியவற்றை தனது மூலமாக (கடந்த 25ம் தேதி) நிராகரிக்கப்படுகிறது. இதுகுறித்து வேண்டுமானால் ஜனாதிபதியிடம் முறையிடலாம் என குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், விடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை வரும் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சார்பில் மத்திய அரசு தங்கள் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 26-ம் தேதி நடைபெறவுள்ள விசாரணை மீது பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: