விபசாரம், திருட்டு கும்பல் அதிகரிப்பு என புகார்: வடசேரி பஸ் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் சமீப காலமாக குற்ற செயல்கள் அதிகமாக நடக்கின்றன. திருட்டு, கஞ்சா, லாட்டரி டிக்கெட் விற்பனையுடன் விபசார கும்பலின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. காலை வேளையில் வெளியூர் பஸ்களில் வந்திறங்கும் நபர்களை விபசாரத்துக்கு அழைக்கும் நிலை உள்ளது.

வெளியூரில் இருந்த வந்த பஸ்சில கடந்த வாரம் அதிகாரி ஒருவர் வந்து இறங்கினார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், அதிகாரி என்பது தெரியாமல் பிரபல லாட்ஜ் பெயரை கூறி, வாருங்கள் என்று அழைத்துள்ளார்.

இது மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பயணிகளிடம் அதிகளவில் திருட்டுகள் நடக்கின்றன. பிச்சை எடுப்பது போல் பஸ் நிலையத்தில் உலா வரும் கும்பல் பயணிகளிடம் உடமைகளை அபேஸ் செய்கிறார்கள். குடிபோதையில் கிடப்பவர்களிடம் இருந்தும் பணம், செல்போன்கள் திருடப்படுகின்றன.

பஸ் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட குளிரூட்டும் அறை, கேட்பாரின்றி கஞ்சா, விபசார கும்பலின் தங்குமிடமாக மாறி உள்ளது. ஹோமோசெக்ஸ் கும்பலும் அதிகரித்துள்ளது. போலீசார் அவ்வப்போது மட்டும் வந்து கண்காணித்து செல்வதால், சமூக விரோத கும்பல் சுதந்திரமாக உலா வருடம் இடமாக பஸ் நிலையம் மாறி உள்ளது.

இது பற்றி ஏராளமான புகார்கள் வந்த நிலையில், திடீரென நேற்று மதியம் எஸ்.பி. பத்ரி நாராயணன் வடசேரி பஸ் நிலையத்துக்கு வந்தார். சம்பந்தப்பட்ட வடசேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு கூட எஸ்.பி. வந்த பின்னர் தான் இது பற்றி தெரியும். உடனடியாக அவரும் சம்பவ இடத்துக்கு வந்தார். பஸ் நிலையம் முழுவதும் சுற்றி பார்த்த எஸ்.பி., கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

எஸ்.பி. வந்த சமயத்தில் புறக்காவல் நிலையத்தில் கூட போலீசார் இல்லை. இது பற்றி கேட்டவர், புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அனைத்து கேமராக்களும் முழுமையாக இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், வடசேரி பஸ் நிலையத்தில் பயணிகளை எச்சரிக்கை செய்யும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பஸ் நிலையத்தில் குற்ற செயல்களை தடுக்க தவறினால், போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Related Stories: