சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் முன்பு கடந்த 21ம் தேதி காலை 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார், கொலையாளி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் அடையாளம் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியை சேர்ந்த தஸ்தகீர் மகன் அப்துல்ரஜாக் (20) என்பதும், இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஓட்டல் தொழிலாளியாக வேலை செய்து வந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் வந்து தனது குடும்பத்தினரை பார்த்துவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி இரவு கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து பஸ்சில் வந்த அப்துல்ரஜாக் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையில் வரசித்தி விநாயகர் கோயில் முன்பு மர்ம நபர்களால் தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இவரது உடலை உறவினர்கள் மருத்துவமனையில் பார்த்து அடையாளம் சொன்னதை தொடர்ந்து தற்போது போலீசார் அப்துல் ரஜாக்கை கொலை செய்தது யார், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: