பிரிக்‍ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறாரா சீன அதிபர் ஜின்பிங்?... வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

டெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் டெல்லி வருகிறார் என்று வெளியான செய்திகள் தவறு என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்‍ஸ் மாநாடு, இந்த ஆண்டு மத்தியில் நடைபெறவுள்ளது. இம்முறை இந்த மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன்னதாக கொரோனா தணிந்து ஓரளவு இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த மாநாடு காணொலி வாயிலாக அல்லாமல் நேரலையாக நடைபெறும் என கூறப்படுகிறது. இதனிடையே இந்த முறை பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடப்பதற்கு சீனா ஆதரவு அளிக்கும் என பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில் சீன செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.

இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்த தகவலுக்கு வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்; பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் டெல்லி வருகிறார் என்று வெளியான செய்திகள் தவறானது. கொரோனா காரணமாக பிரிக்ஸ் மாநாடு எப்போது நடக்கும் உள்ளிட்ட முடிவுகள் இன்னும் எடுக்கப்படாத நிலையில் சீன அதிபர் வருவதாக வெளியான செய்தி ஆச்சரியம் அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

Related Stories: