மதுரை: மதுரை எய்ம்ஸ் செயல் இயக்குநராக மூத்த பேராசிரியர் ஹனுமந்தராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தோப்பூர் பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் 750 படுக்கை வசதியுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை ரூபாய் 1266 கோடியில் அமைக்க கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான நிதியை ஜப்பானிய பன்னாட்டு முகமை ஜிக்கா நிறுவனம் என்ற அமைப்பு மூலம் கடன் பெறுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. 2022ம் ஆண்டு செப்டம்பரில் இந்த பணி நிறைவடையும் என்று ஏற்கனவே உத்திரவாதம் அளிக்கப்பட்டது.
இதனிடையே ஜிக்கா அமைப்பிடம் இருந்து இதுவரை நிதி கிடைக்கப்பெறவில்லை. தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.எய்ம்ஸ்க்கான நிலத்தை, மத்திய அரசிடம் மாநில அரசு ஒப்படைக்கவில்லை என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்தது. ஆனால், தமிழக அரசு நிலத்தை வழங்கி விட்டதாகவும், மத்திய அரசு இன்னும் பெறவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், திருப்பதி எஸ்வி மருத்துவ அறிவியல் நிறுவன டீனாக உள்ள மூத்த பேராசிரியர் ஹனுமந்தராவ் மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், ஜம்முவின் விஜய்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநராக சக்தி குமார் குப்தா என்பவரும் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநராக தேவ் சிங் கடோச் என்பவரும் ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குராக விர் சிங் நேகி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக உள்ள வி.எம்.கடோச், மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துமனையின் தலைவராக நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. வி.எம்.கடோச்சுடன் 14 பேர் கொண்ட உறுப்பினர்களையும் நியமித்தது குறிப்பிடத்தக்கது.