'கூட்டங்கள் கூடியபோது அரசுகளே மாறியிருக்கின்றன'மத்திய அமைச்சரின் கருத்துக்கு ராகேஷ் திகாயத் பதில்

பஞ்சாப்: கூட்டங்கள் கூடியபோது அரசுகளே மாறியிருக்கின்றன என பாரதிய கிசான் யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 3 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கிடையே விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வெறும் கூட்டத்தைக் கூட்டுவது மட்டும் சட்டங்களை திரும்பப்பெற வழிவகுக்காது என கூறினார்.

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் நடந்த மகாபஞ்சாயத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் இது குறித்து கருத்து தெரிவித்தார். கூட்டங்கள் கூடியபோது அரசுகளே மாறியிருக்கின்றன என அமைச்சருக்குப் பதிலடி கொடுத்துள்ளார். வெறுமனே கூட்டத்தை கூட்டுவது மட்டும் சட்டங்களைத் திரும்பப்பெற வழிவகுக்காது என அமைச்சர் பேசுகிறார். ஆனால் அவர்கள் ஒரு உண்மையை மறந்துவிட்டார்கள். கூட்டங்கள் கூடியபோது அரசுகளே மாறியிருக்கின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த விளைச்சலையே அழிக்க முடியுமா? என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

அவற்றுக்கு முன் நீங்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல. வெறும் வேளாண் சட்டங்கள் மட்டுமல்ல, மின்சார திருத்த மசோதா, விதை மசோதா என அனைத்தைப் பற்றியும் கேள்விகள் உள்ளன. இந்தப் போராட்டம் விவசாயிகளுடையது மட்டுமல்ல, ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பிற துறையினருக்குமானது. இந்த சட்டங்கள் ஏழைகளை அழித்து விடும். எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும்.

விவசாயிகளால் வயல்வெளிகளிலும், போராட்டக்களத்திலும் ஒரே நேரத்தில் பங்களிப்பு செய்ய முடியும். அது மட்டுமின்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை தியாகம் செய்யவும் விவசாயிகளால் முடியும் எனவும் கூறினார்.

Related Stories: