அறந்தாங்கி : அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான குட்கா, பான் மசாலா போன்றவை தடையின்றி கிடைப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில் ஆட்கொல்லி நோயான புற்றுநோயை உருவாக்கக் கூடிய குட்கா, பான் மசாலா போன்றவற்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு தடை செய்தது.
அரசால் தடைசெய்யப்பட்டாலும் தமிழகம் முழுதும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை ஆமோகமாக நடந்து வருகின்றது. எனவே தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பெட்டிக்கடை முதல் மளிகை கடை வரை தடை செய்யப்பட்ட போதை பொருள் தடையின்றி கிடைக்கிறது.
ஆனால் ஒரு பாக்கெட்டின் விலை 300 மடங்கு அதிகரித்து விற்பனை செய்கின்றனர். காவல்துறையினர் பெயரளவில் கடைகளில் ஆய்வு செய்து ஒரு சில பாக்கெட்டுகளை பறிமுதல் செய்கின்றனர். இருப்பினும் குட்கா விற்பனையை தடுக்க முடியவில்லை. எனவே காவல்துறையினர் உடனே அறந்தாங்கி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.