×

புயல் நிவாரண பணம் வாங்கியவர்களுக்கு வேட்டு வைத்த ஐகோர்ட்… பணத்தை திருப்பி செலுத்தும் நிலை!

சென்னை : புயல் நிவாரண நிதி 110 கோடி ரூபாயை தகுதியில்லாதவர்கள் மோசடியாக பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி  விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியை அடுத்த ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த மீராராணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:சமீபத்தில் தமிழக கடலோர பகுதியைத் தாக்கிய புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அந்த நிவாரண உதவிகளை தகுதியில்லாத பலர், தங்கள் நிலங்களுக்கான ஆவணங்களை மோசடியாக பெற்று, 110 கோடி ரூபாய் வரை நிவாரண உதவியை  பெற்றுள்ளனர்.

இந்த மோசடி குறித்து புகார் தெரிவித்த பின், தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட 32 கோடி ரூபாய் திருப்பி வசூலிக்கப்பட்டுள்ளது.இதற்கு உடந்தையாக இருந்த 80 அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மோசடியாக நிவாரண உதவியை பெற்றவர்களிடம் இருந்து தொகையை திரும்ப வசூலித்து, தகுதியானவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு  மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  நிவாரண உதவி பெற்ற  தகுதியில்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறித்தும் அறிக்கை தாக்கல் வேண்டும் என்று உத்தரவிட்டனர்.மேலும்,  இந்த .மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறும் உத்தரவிட்டு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Icort , புயல்
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான...