வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய காணொலியை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது பற்றிய ஆய்விற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது விண்வெளி பயணத்தை தொடங்கிய பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த வியாழன் அன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இந்த நிலையில்,பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாயில் இறங்கிய காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது.
இத்துடன் பெர்சவரன்ஸ் விண்கலம் பல்வேறு கோணங்களில் செவ்வாய் நிலப்பரப்பை எடுத்த பல்வேறு புகைப்படங்களையும் நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும் அங்கிருந்த மண் மற்றும் கற்களை பூமிக்கு கொண்டு வரவும் பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பப்பட்டது. இது அடுத்த 2 ஆண்டுகள் செவ்வாய் கோளை சுற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. அமெரிக்காவின் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில் இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் ஸ்வாதி மோகனுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.