கர்நாடக கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 6 பேர் பலி.. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!!

பெங்களூரு : கர்நாடக மாநிலம் சிக்பலாபூர் மாவட்டத்தில் கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.சிக்பலாபூர் மாவட்டம் ஹீராநாகவேலி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஜெலாட்டின் குச்சிகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த 2 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர், நேபாள நாட்டவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த வெடி விபத்தில் சிலர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமவளத்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி கூறினார். மேலும் இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, மாவட்ட விசாரணை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகள் வெடி விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இந்த சோக விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,கல்குவாரி வெடி விபத்தில் 6 பேர் பலியான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், என்றார்.

Related Stories: