மணமக்களுக்கு பரிசாக 5லிட்டர் பெட்ரோல்: சேலத்தில் நண்பர்கள் வழங்கினர்

சேலம்: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக பெட்ரோல் விலை பற்றிய மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு அவர்களின் நண்பர்கள் 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக அளித்த சம்பவம் நடந்துள்ளது.சேலம் கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் முஸ்லிம் ஜோடிக்கு நேற்று காலை திருமணம் நடந்தது.

விழாவில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதிக்கு பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்தினர், அப்போது, நண்பர்கள் சிலர் திருமண ஜோடிக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கினர். இதனை மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டனர். இது குறித்து அந்த நண்பர்கள் கூறுகையில், ‘‘மணமக்களுக்கு மொய் அல்லது பயனுள்ள பொருட்களை பரிசாக வழங்கலாம் என எண்ணினோம். அப்போது, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் பெட்ரோலும் உள்ளது. தற்போது, பெட்ரோல் விலை அதிகமாக இருந்தையடுத்து, 5 லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கி வந்து கொடுத்துள்ளோம்’’ என்றனர்.

Related Stories: