வாஷிங்டன்: மர்ம கிரகமாக உள்ள செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பதை கண்டறிய, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. இந்த ஆய்வுக்காக ‘பெர்சவரன்ஸ்‘ என்ற விண்கலத்தை கடந்தாண்டு ஜூலையில் அது அனுப்பியது. இந்த விண்கலம், இந்திய நேரப்படி இன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண், கற்களை பூமிக்கு திரும்பி எடுத்து வரவும் இந்த விண்கலம் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த விண்கலத்தில் உள்ள ரோவர், இன்று செவ்வாய் கிரகத்தில் இறங்க இருப்பதால், நாசா விஞ்ஞானிகள் மிகவும் பரபரப்புடன் உள்ளனர். மேலும் இந்த நிகழ்வை அமெரிக்கா மட்டுமில்லாது இந்தியா, உள்பட பல உலக நாடுகள ஆர்வமுடன் எதிர்பார்ததுள்ளன.