அழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை!

நன்றி குங்குமம் தோழி

மருந்தாக மட்டுமின்றி உணவாகவும் பயன்படும் தோட்டத்து மூலிகை வாதுமை. வாதுமைப் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறுவதோடு ஆரோக்கியமும் பெறுகிறது. வாதுமை உண்பதின் மூலமும், அதை உடலில் பூசி தேய்த்து வருவதன் மூலமும் அழகையும், இளமையையும், உடல் ஊட்டத்தையும் பாதுகாக்க முடியும். வாதுமைப் பருப்பில் வைட்டமின்கள், தாதுப் பொருட்களுடன் புரதம் அதிகமாக  இருக்கின்றன. மாவுச்சத்து (ஸ்டார்ச்) இதில் இல்லை என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது.

நீரிழிவு நோயால் ஏற்படும் சத்துக் குறைவை இது போக்குகிறது. எல்லாவித இறைச்சிகளிலும் இருப்பதை விட பல மடங்கு புரதம் வாதாமில் உள்ளது. அதே போன்று எல்லா பருப்பு இனங்களை விட இதில் புரதம் அதிகம். மரக்கறி உண்பவர்களுக்கும், மரக்கறி பழக்கம் உடைய விளையாட்டு வீரர்களுக்கும் பயனுள்ள உணவு வாதாம் பருப்பு. இறைச்சி சாப்பிடவில்லையே என்ற ஏக்கம் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடும் வீரர்களுக்கு தேவையில்லை.

வாதாமே போதும். இறைச்சி ஜீரணமாகும் போது உடலில் கெட்ட கழிவுகளை உற்பத்தி செய்யும். வாதாமில் அந்தக் கெடுதல் இல்லை. சத்தோடு சுவையும் மிகுந்த உணவு வாதாம். இதில் உள்ள அதிகமான தைலச்சத்து ‘ஒலியன்’ என்பதாகும். மேலும் இதில் மிக முக்கியமான வழவழப்பான லீனோலிக் அமிலம் இருக்கிறது. அத்துடன் மேலும் சில வழவழப்பான சத்துக்களும் இதில் உள்ளன. இவை அனைத்தும் ஜீரணத்திற்கு ஏற்ற நெய் வகை ஆகும்.

வாதுமையின் பால் சிறுநீர்ப்பையில் ஏற்படும் நோய்களுக்கும், பித்த உபரியால் ஈரலில் ஏற்படும் நோய்களுக்கும்  சிறந்த மருந்து. தொண்டைக் கமறலைப் போக்கி, குத்திருமலை தணிக்கும் ஆற்றல் உண்டு. உடம்பினுள் உள்ள வறட்சியைப் போக்கும். மலத்தை இளக்கும், ஊட்டம் தரும், தாது விருத்தி செய்யும். வாதுமைப் பிசின் இரண்டு முதல் எட்டு கிராம் வரை உட்கொள்ள இருமல், நீர் எரிச்சல் போன்ற நோயைப் போக்கும். ஆண்மையைப் பெருக்கும், தாது விருத்தி லேகியங்களில் வாதுமைப் பிசினை சேர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

Related Stories: