தமிழக மீனவர்களை படுகொலை செய்த சிங்கள அரசை கண்டித்து சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம் : திமுக அறிவிப்பு

சென்னை:சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது மீன்பிடி விசைப்படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம்சன் டார்வின் ஆகிய 4  மீனவர்கள் கடந்த 18ம் தேதி நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கி படுகொலை செய்ததுடன், மற்றொரு ரோந்து கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத் தாக்கி மூழ்கடித்துள்ளனர்.

இந்த கொடூரப் படுகொலை குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், இந்த வன்செயலைக் கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை, திருவான்மியூர், வடக்கு மாடவீதியில் சென்னைத் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற இருக்கிறது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்கும் இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில், சென்னை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற,  சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பகுதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் மற்றும் திமுகவின் அனைத்து நிலை சார்ந்தவர்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்று மீனவர்களுக்கு ஆதரவான இந்த பட்டினிப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: