சென்னை :சென்னை மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்ஃபி மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும்பகுதியாக மெரினா கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை அதிகஅளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது.இன்றைய இளைய தலைமுறையினர், ஸ்மார்ட் கைபேசிகளை பயன்படுத்துவதிலும், அதில் செல்ஃபி எடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையின் அடையாளமாக, இளைஞர்களை கவரும் விதமாக ஓர் இடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது.
அதன் அடிப்படையில் ரூ.24 லட்சம் செலவில் மெரினா கடற்கரையில், ராணி மேரி கல்லூரிக்கு எதிரில் ‘நம்ம சென்னை’ செல்ஃபி மையத்தை அமைக்கும் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்றன. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நின்று செல்ஃபி எடுக்கும் மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். நாட்டின் பெருநகரங்களான புதுடெல்லி, ஹைதராபாத். பெங்களூரு ஆகிய நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள சிற்பங்களின் தொடர்ச்சியாக சென்னையில் தற்பொழுது நம்ம சென்னை” அடையாள சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதோடு, மாநகராட்சியின் சீர்மிகு திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட எலக்ட்ரிக் மிதிவண்டி திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், சென்னையின் பல்வேறு இடங்களில் கூடுதலாக 1000 எலக்ட்ரிக் மிதிவண்டிகள் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.