கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் கேட்டரிங் சேவையை மீண்டும் தொடங்க கோரி வழக்கு : இந்திய ரயில்வே முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட நடமாடும் கேட்டரிங் சேவையை மீண்டும் அனுமதிப்பது குறித்து இந்திய ரயில்வே 4 வாரங்களில் முடிவெடுக்குமாறு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ரயில்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், நடமாடும் உணவு வழங்கல் சேவையையும் நிறுத்தி வைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், ரயில்களில் நடமாடும் உணவு வழங்கல் சேவைக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, இந்திய ரயில்வே, டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.புதிய டெண்டரை ரத்து செய்து, உணவு வழங்கல் சேவைக்காக கடந்த முறை உரிமம் பெற்றுள்ளவர்களை அனுமதிக்க கோரி இந்தியன் ரயில்வே நடமாடும் உணவு வழங்குவோர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, ரயில்வேயில் பல சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில் உணவு வழங்கல் சேவை இதுவரை துவங்கப்படவில்லை. இதுசம்பந்தமாக கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது ரயில்வே சார்பில் ஆஜரான வக்கீல், புதிய டெண்டர் என்பது சிறப்பு ரயில்களுக்கு மட்டும் தான்.  வழக்கமான ரயில்களில் உணவு வழங்கலை அனுமதிக்க வேண்டும் என்ற மனுதாரர் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலிக்க தயாராக உள்ளோம் என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கொரோனா ஊரடங்கால் ரயில்வே உணவு வழங்கல் சேவையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, அவர்களின் சேவையை மீண்டும் துவங்குவது தொடர்பாக 4  வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வேயுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: