ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடுக்கக்கோரும் வழக்கு!: நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர் கோலிக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் பிரபல நடிகை தமன்னா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிற மாநிலங்களை போலவே கேரளாவிலும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி கேரளாவை சேர்ந்த பாலி  வடக்கன் என்பவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் பணத்தை இழந்து பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், பலர் தற்கொலை செய்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விளையாட்டுக்குப் பல சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல பிரபலங்கள் விளம்பரங்களில் தோன்றி மக்களை ஊக்குவித்து வருகின்றனர். இந்த விளம்பரங்களை பார்த்து பலரும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி ஒரு சூதாட்டம் என்பதால் இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார், ஆன்லைன் ரம்மி விளையாட்டின் பிராண்ட் அம்பாசிடர்களாக செயல்படும் பிரபல நடிகை தமன்னா, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, மலையாள நடிகர் அஜு வர்க்கீஸ் ஆகியோரும், கேரள அரசும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அதிக அளவில் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த விளையாட்டால் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் இந்த விளையாட்டுக்கு ஏராளமானோர் அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றம்  தமன்னா, கோலிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: