டி.கே.சிவகுமாரின் அரசியல் வாழ்க்கை முடிய உள்ளது: பாஜ மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் ஆருடம்

பெங்களூரு: காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமாரின் அரசியல் வாழ்க்கை விரைவில் முடியவுள்ளது. அவர் மீண்டும் சிறைக்கே  செல்வார் என்று பா.ஜ. மாநில தலைவர் நளின்குமார்கட்டீல் தெரிவித்தார். சித்ரதுர்காவில் இது தொடர்பாக நளின்குமார்கட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லை என்றால் தீவைக்கும் வேலையில் ஈடுப்பட்டு வருகிறது. அதே போல் அதிகாரத்தில் இருந்தால் எதிர் கட்சிகளை ஒடுக்கும் பணியில் ஈடுப்படுகிறது.நாட்டில் சிஏஏ கொண்டு வந்த நேரத்தில் காங்கிரஸ் கலவரத்தை ஏற்படுத்தியது. அப்போது துப்பாக்கி பிடித்து சென்றனர். தற்போது வாள் பிடித்து சென்றனர். இவர்களின் கொள்கையால் நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு விவசாயிகள் குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. அவர் முதல்வராக இருந்த நேரத்தில் மாநிலத்தில் 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்போது விவசாயிகள் பெயரில் ரவுடிசம் செய்து வருவது சரியில்லை. டெல்லியில் நடைபெற்ற வன்முறை குறித்து விசாரணை, நடவடிக்கை எடுக்க வேண்டும், செங்கோட்டை மீது தாக்குதல் தேசிய கொடிக்கு அவமானம் செய்துள்ளது சரியில்லை. சில அரசியல் கட்சிகள் விவசாயிகளின் கவனத்தை திசைத்திருப்பி வருகிறது. இதனால் விவசாயிகள் இதன் மீது கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் பெயரில் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கவுரவம் கொடுக்கும் தினத்தில் எந்த கோரிக்கையாக இருந்தாலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும். காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமாரின் அரசியல் வாழ்க்கை விரைவில் முடியவுள்ளது. அவர் சிறையிலிருந்து வந்த போது வரவேற்புடன் அழைத்து சென்றனர். ஆனால் அவர் எங்கிருந்து வந்தாரோ மறுபடியும் அதே இடத்துக்கே செல்லவுள்ளார் என்றார்.

Related Stories: